வெளிநாட்டினருக்கான ரெசிடென்சி விசாக்கள் இனி ஒரு வருடத்திற்கு மட்டுமே..!! புதிய விதியை அமல் படுத்தும் குவைத் அரசு..!!
வளைகுடா நாடுகளில் பொதுவாக வெளிநாட்டவர்களுக்கு அளிக்கப்படும் ரெசிடென்சி விசாக்களானது இரண்டு வருடங்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், குவைத்தில் இனி ரெசிடென்ஸ் விசாக்களானது ஒரு வருடத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவின் தாக்கம் மற்றும் கொரோனா தொற்று நோய் தாக்கத்திலிருந்து குவைத் மீள முயன்று வரும் சூழ்நிலையில் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும் இரு வருட ரெசிடென்ஸ் விசாக்கள் இனி ஓராண்டிற்கு வழங்க குவைத் அரசு திட்டமிட்டுள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த புதிய முடிவானது நாட்டிற்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டினருக்கும், குவைத் குடிமக்களின் வெளிநாட்டு மனைவிகளுக்கும், குவைத் அல்லாதவர்களை மணந்த குவைத் நாட்டை சேர்ந்த பெண்களின் குழந்தைகள் மற்றும் குவைத் அல்லாதவர்களை மணந்த குவைத் நாட்டை சேர்ந்த ஆண்களின் குழந்தைகள் ஆகியோருக்கும் பொருந்தும் என்று அந்நாட்டின் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது
இருப்பினும், உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, தற்பொழுது குவைத்தில் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட பணி அனுமதி (work permit) பெற்று தனியார் துறையில் பணிபுரியும் வெளிநாட்டினர் இந்த புதிய முடிவிலிருந்து விலக்கு பெற்றுள்ளனர் என்று கூறபட்டுள்ளது.
குவைத்தின் 4.8 மில்லியன் மக்கள்தொகையில் தற்போது 70 சதவிகிதத்தினர் வெளிநாட்டினர் வசித்துவந்த நிலையில் அதனை மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதமாகக் குறைக்க விரும்புவதாக குவைத் பிரதமர் ஷேக் சபா அல்-கலீத் அல்-சபா கடந்த ஜூன் மாதம் தெரிவித்திருந்தார். அதற்கு வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை சுமார் 2.5 மில்லியன் குறைக்க வேண்டும் எனவும் அதன் ஒரு பகுதியாக, பல அரசாங்க நிறுவனங்கள் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தத் தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பல்கலைக்கழக பட்டம் பெறாத 60 வயதிற்கு மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு பணி அனுமதி வழங்குவதை நிறுத்தப்போவதாகவும் குவைத் அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த முடிவானது வரும் ஜனவரி 1, 2021 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் அவர்களின் ரெசிடென்ஸ் பெர்மிட் காலாவதியாகும் போது இந்த நடைமுறை பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.