ரெசிடென்சி விசா, எக்ஸிட் & ரீ-என்ட்ரி விசாக்களின் செல்லுபடியை செப்டம்பர் 30 வரை நீட்டித்த சவூதி அரேபியா..!!
கோவிட் -19 தொற்றுநோயால் விதிக்கப்பட்ட பயண தடையின் காரணமாக சவூதி அரேபியாவிற்கு திரும்ப முடியாமல், நுழைவு நிறுத்தி வைக்கப்பட்ட நாடுகளில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களுக்கான குடியிருப்பு அனுமதிகளின் (இகாமா) செல்லுபடியை தானாகவே நீட்டிப்பதாக சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
பயண தடையை தொடர்ந்து ஏற்கனவே நீட்டிக்கப்பட்டிருந்த இந்த குடியிருப்பு அனுமதியின் செல்லுபடி காலம் இப்போது செப்டம்பர் 30 ம் தேதி வரை செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதனுடன் விசிட் விசா மற்றும் எக்ஸிட் & ரீ-என்ட்ரி விசாக்களுக்கும் இந்த விசா நீட்டிப்பானது பொருந்தும் மற்றும் இது கூடுதல் கட்டணம் இல்லாமல் செய்யப்படும் என்றும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் -19 தொற்றுநோயின் விளைவுகளைச் சமாளிக்க சவூதி அரேபிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த விசா நீட்டிப்பானது குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்குள் வருகிறது என்றும், நாட்டின் நிதி மற்றும் பொருளாதார பாதிப்புகளைத் தணிக்க பங்களிக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. .
சவூதி அரேபிய நாட்டின் பாஸ்போர்ட் பொது இயக்குனரகம், தேசிய தகவல் மையத்தின் ஒத்துழைப்புடன் காலாவதியாகிய விசா வைத்திருப்பவர்கள் பாஸ்போர்ட் துறைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி மின்னணு முறையில் விசா நீட்டிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.