குவைத்: ஜூன் 27 முதல் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே மால், உணவகம், சலூன், ஜிம், கடைகளுக்கு செல்ல அனுமதி..!!
குவைத் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வரும் ஜூன் 27, ஞாயிற்றுக்கிழமை முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே பொது இடங்களுக்கு செல்ல அனுமதியளிக்கப்படும் என்று குவைத் அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் இருக்கக்கூடிய 6,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட உணவகங்கள், கஃபேக்கள், ஜிம்கள், சலூன்கள், கடைகள் மற்றும் மால்கள் போன்ற அனைத்து பொது இடங்களுக்கும் குறைந்தபட்சம் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியின் ஒரு டோஸ் எடுத்து கொண்ட குடியிருப்பாளர்கள் மட்டுமே செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மால்களில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்கள் மட்டுமே உள்நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
குடியிருப்பாளர்கள் தங்களின் மொபைல் அப்ளிகேஷன் (My Mobile ID) வாயிலாக தடுப்பூசி பெற்றுக்கொண்டதற்கான சான்றை காண்பிக்க வேண்டும் எனவும், அதில் ஒன்று அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றதை குறிக்க கூடிய பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் தோன்றும் நபர்கள் மட்டுமே மேற்கூறிய இடங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் மொபைல் அப்ளிகேஷனில் (My Mobile ID) சிவப்பு நிறத்தை கொண்டிருப்பவர்களுக்கு நுழைவு மறுக்கப்படும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. .
குவைத் நாட்டின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹமாத் ஜாபர் அல்-அலி அவர்களின் தலைமையில் நடைபெற்ற கொரோனா அவசரக் குழு கூட்டத்தில் நோய்த்தொற்று பாதிப்புகள் தற்போது நாட்டில் மீண்டும் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோன வைரஸ் மீண்டும் பரவிவரும் நிலையில், டெல்டா என பெயரிடப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸால் குவைத் நாட்டில் சிலர் பாதிக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்ததாக கடந்த வாரம் குவைத் நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.