1,000 வெளிநாட்டவர்களின் டிரைவிங் லைசென்ஸை திரும்ப பெற்ற குவைத்..!! காரணம் இதுதான்..!!
குவைத்தின் பொதுப் போக்குவரத்துத் துறையானது, கடந்த சில மாதங்களாக விதிகளை மீறி செயல்படும் வெளிநாட்டவர்களிடம் இருந்து அவர்களின் ஓட்டுநர் உரிமங்களை திரும்ப பெற்று வருகிறது. அதன்படி குவைத்தில் இருக்கக்கூடிய வெளிநாட்டவர்களிடமிருந்து 40 நாட்களில் சுமார் 1,000 ஓட்டுநர் உரிமங்களைத் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தற்பொழுது வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஒரு நாளைக்கு சராசரியாக 23 ஓட்டுநர் உரிமங்கள் திரும்பப் பெறப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் சம்பளம், பல்கலைக்கழக பட்டம் அல்லது தொழில் போன்ற உரிமம் பெறுவதற்கான குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், வெளிநாட்டவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் திரும்பப் பெறப்படும் என கூறப்பட்டுள்ளது.
தற்போது குவைத்தில் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல் கலீத்தின் அறிவுறுத்தலின் பேரில் வெளிநாட்டவர்களின் அனைத்து கோப்புகளும் தொடர்ந்து சரிபார்க்கப்பட்டு வருவதாக குவைத்தின் அல் ராய் செய்தித்தாள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த சோதனையின் முடிவில் ஓட்டுநர் உரிமம் திரும்பப் பெறப்பட்ட பின்னர் வாகனம் ஓட்டும் வெளிநாட்டினரை கைது செய்யவும், நாட்டின் சட்டத்தை மீறியதற்காக அவர்களை நாடு கடத்தப்படுவதற்கும் போக்குவரத்து துறையானது ரோந்து குழுக்களுக்கு அனுமதியும் வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஏனெனில் குவைத்தில் நடைமுறையில் இருக்கும் விதியின் படி, ஒரு வெளிநாட்டவர் குவைத்தில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்ட முடியாது மற்றும் ரத்து செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்துடன் வாகனம் ஓட்ட அவர்களுக்கு உரிமை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.