6 மாதத்திற்கு மேல் வெளிநாட்டில் இருக்கும் குடியிருப்பாளர்கள் ஓமான் திரும்ப “ஸ்பான்சர் லெட்டர்” அவசியம்.!! DGPR அறிவிப்பு..!!
வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் ஓமான் நாட்டு குடியிருப்பாளர்களில் செல்லுபடியாகும் ஓமான் குடியிருப்பு விசா வைத்திருந்து தற்போது ஓமானிற்கு திரும்ப விரும்பும் குடியிருப்பாளர்கள், ஓமான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் மீண்டும் ஓமான் திரும்பலாம் என அறிவிக்கப்பட்டு அதன்படி வெளிநாடுகளில் இருக்கும் குடியிருப்பாளர்கள் ஓமானிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், ஓமான் விசா வைத்திருந்து 180 நாட்களுக்கும் மேலாக ஓமானிற்கு வெளியே தங்கியிருக்கும் குடியிருப்பாளர்கள் மீண்டும் ஓமான் திரும்ப விரும்பினால் அவர்கள் தங்களின் ஸ்பொன்சரிடமிருந்து, சனத் சென்டர் (Sanad Center) அல்லது விசா வலைத்தளம் மூலமாக அவர்களின் குடியுரிமையை அனுமதிப்பது தொடர்பாக ஒரு கடிதத்தை பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கடிதமானது MoFA (வெளியுறவு அமைச்சகம்) ஒப்புதலுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று பாஸ்போர்ட் மற்றும் வதிவிட இயக்குநரகம் (Directorate General of Passports and Residence – DGPR) தெரிவித்துள்ளது.
மேலும் ஆறு மாதங்களுக்கும் மேலாக ஓமான் நாட்டிற்கு வெளியே இருக்கும் எந்தவொரு வெளிநாட்டினரும் ஓமானிற்கு திரும்பி வர விரும்பினால் ராயல் ஓமான் காவல்துறையிடமிருந்து தடை இல்லா சான்றிதழ் (NOC) பெற தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
180 நாட்களுக்கு மேல் வெளிநாட்டில் வசிக்கும் ஓமான் குடியிருப்பாளர் மீண்டும் ஓமான் திரும்பி வர விரும்பினால், அவரின் ஸ்பான்சர் E-Visa வலைத்தளம் அல்லது சனத் அலுவலகங்கள் வழியாக ஸ்பான்சர் தனது தொழிலாளியின் குடியுரிமை தொடர்பான தகவல்களை சேகரிக்க வேண்டும். பின்னர் தனது தொழிலாளி ஓமான் நாட்டிற்கு திரும்ப வேண்டி ஓமானின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும்” என்று பாஸ்போர்ட் மற்றும் வதிவிடத்தின் பொது இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனாவினால் விதிக்கப்பட்ட லாக்டவுன் காலங்களில் காலாவதியான விசாவினை வைத்திருப்பவர்கள் தங்களின் விசாவினை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் என்றும் பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சகத்திடம் ஒப்புதல் பெற்று ஓமானிற்கு திரும்பி வருபவர்கள் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.